25 மே 2021

               நான் சொன்னால் உனக்கு ஏன்  கோபம் வருகிறது ... ?

                                                                       மற்றும்

                                                       பச்சைத் தீ ... !

                                                                         
                                           - பசு. கவுதமன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------



ன்னுடைய நூல்களின் இறுதி கட்டப் பணி இன்னும் முழுமையடையவில்லை. மீண்டும் பயணிக்க வேண்டியுள்ளது.  ஏறத்தாழ இறுதி கட்டத்தில் உள்ள   இரண்டு நூல்களும் முக்கியமான பதிவுகள். 
NCBH  வெளியீட உள்ள, “ நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது ? “  என்ற மொழி, கலை,  இலக்கியம் பற்றிய பெரியாரிய தொகுப்பு. ஆறு தொகுதிகள், ஒவ்வொன்றும்  குறைந்தது 800 பக்கங்களிலிருந்து அதிகபட்சமாக 1200 பக்கங்களுக்குக் குறையாது.  அய்ந்தாண்டுகால  உழைப்பும்,  தேடலும் !  அதற்கே  ஒரு  நூல்  எழுதலாம்.
தந்தை பெரியார்  அவர்களின்  1925 லிருந்து  1973 வரைக்குமான  பதிவுகள்  உள்ளது உள்ளபடி.
90 விழுக்காடு பெரியாரவர்களின்  பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அப்படியே குறைக்காமல், சுருக்காமல்  மறுபதிவு செய்துள்ளேன். பெரியாரை, பெரியாராகப்  படிக்கவேண்டும் என்ற  என்னுடைய  பேரவாவின்  வெளிப்பாடு  இது.
2011 களின் இறுதியில் இந்நூலுக்கான பணிகளைத் துவக்கினேன் . 2013 களில் என்னுடைய வலது கண்பார்வை இழப்பும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் அதற்குப் பின்னால்  கண்களுக்கான ஓய்வும் , பயிற்சியும் இப்படியாக ஓராண்டு முழுவதும் எந்த பணியும் செய்ய இயலாத நிலையில் ஒரு நீண்ட இடைவெளி . இப்போதும் கூட அரை மணிநேரம்  படித்தாலோ , எழுதினாலோ  இரண்டு மணிநேரமாவது  கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டிய நிலையில் தான் உள்ளேன்.






2014 களின் துவக்கத்திலிருந்து தொடர்ச்சியான தேடல். நிறைய தோழர்களின் ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும். நன்றி சொல்ல தனியே ஒரு புத்தகமே போடலாம். சற்றேறக்குறைய A4 அளவில் 9000 பக்கங்களுக்கு மேல் ஒளியச்சு செய்யப்பட்டுவிட்டது. இன்னமும் தரவுகள் ஒளியச்சு செய்யப்பட்டுக் கொண்டுள்ளன.  இந்த நூல் உள்ளடக்கத்தில்  எப்படி அமையவேண்டும் என்பதில் ஒரு குழப்பமான  மனநிலை எனக்குள் இருந்தபோது , பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்த நான், அங்கு பேராசிரியர் பா. மதிவாணன்  அய்யா அவர்களோடு இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்ன செய்தி பளிச்சென்று ஒரு புள்ளியை வைத்தது , அந்தப் புள்ளியிலிருந்து கோட்டினை இழுத்து உருவத்தை வரையத் துவங்கினேன். அதற்குப் பின்னால் நாடகத்துறை பேராசிரியர் மு இராமசாமி அவர்கள் – கலகக்காரர் தோழர் பெரியா
ர் தான் -  ஒருமுறை என்  இல்லத்திற்கு  வந்திருந்தபோது  சில பயன் மிக்கக் கருத்துக்களை வழங்கினார். அதுபோலவே,  என் மரியாதைக்குரிய தோழர் , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பல அரிய குறிப்புகளை சொல்லி இன்னும்  ‘ கணம் ‘ சேர்த்தார். 



சென்னையிலிருந்து திரும்பியதும் நூலின் உள்ளடக்கத்தை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கியமான சில தோழர்களை அழைத்திருந்தேன். அவர்களில்  தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின்  மாநில பொதுச்செயலாளரும்,  சாகித்திய அகாடமியின் உறுப்பினரும், என் மரியாதைக்குரிய  பேராசிரியருமான அய்யா இரா. காமராசு அவர்களும்,  சிறந்த சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமான தோழர் செ. சண்முகசுந்தரமும்,  சமூக, இலக்கிய உணர்வாளரும், சிறந்த தோழருமான பொறியாளர் செல்வபாண்டியன் அவர்களும் என்னோடு கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி நூலின் உள்ளடக்கத்தினை செழுமைப் படுத்தியுள்ளார்கள். நான் அனுப்பிக் கொண்டுள்ள அத்துணைப் பக்கங்களையும் பகுத்து தலைப்புகளின் கீழ் அடுக்கி நூலுக்கான இறுதி வடிவத்தினை  சென்னையில் இருந்து கொண்டு தோழமைக்குரிய எனது அன்பு மகள் அ.க. தென்றலும் , அன்பு மருமகன் கிறிஸ்டோபர் டொமினிக்கும்  அமைத்துக் கொண்டுள்ளார்கள்.
 NCBH ன் தோழமைக்குரிய என் இனிய நண்பர் சரவணன் அவர்கள் எந்த குறுக்கீடுமின்றி ,
” சிறப்பாக வர வேண்டும் “ என்ற அன்பு வேண்டுகோளுடன் ,
பொறுப்பாளர்கள், தோழர்கள் திரு சபாபதி அவர்களும், திரு குமார் அவர்களும் அவ்வப்போது என் இல்லத்திற்கு வந்து நலம் வினவி, நூலின் வளர்ச்சி அறிந்தும்,  
இடையில் இந்திய பொதுவுடைமை கட்சியினுடைய மாநில பொதுச்செயலாளரும் என் நட்புக்குரிய தோழருமான சி. மகேந்திரன் அவர்களின் விசாரிப்பும் ……,  
என் முழு உழைப்பும் விரைவில்  தமிழ் கூறும்  நல்லுலகத்திற்கு நூல் வடிவில்  ……. !







“ பச்சைத் தீ “  –  வெண்மணிப்பதிவுகள்.
“ ஏஜிகேயின் நினைவுகளும், நிகழ்வுகளும் “  பதிவின்  தொடர்ச்சியாக  வர உள்ள என்னுடைய  நூல்.
இது சம்பவங்களின் மீது கற்பனையை ஓடவிட்டு ,  காதலையும், மோதலையும் கட்டி இழுத்து வருகிற புனைவு அல்ல ! இது கலையுமல்ல , படைப்புமல்ல ? !
திராவிடர் இயக்க பெரியாரியர்களின் இரத்தமும் சதையுமான பங்களிப்புகள். இருட்டடிக்கப்பட்ட எங்கள் தோழர்களின் வலி மிகுந்த சோகங்களையும் , இழப்புகளையும் பதிவு செய்கிற வரலாற்று ஆவணம் .
கீழ்வெண்மணியின் , பின் தொடர்ச்சியாக  நடந்தேறிய நிகழ்வுகளில் மறைக்கப்பட்ட –  மறுக்கப்படுகின்ற  உண்மைகளின் பதிவு .   
காணாமல் போன ,  கவனமாக  மறைக்கப்பட்ட சான்றுகளின்  தேடலின்  பதிவுகள்  ,
இருக்குமிடம்  தேடி  -  கண்டுபிடித்துப்போய்,  “ எங்கே  காட்டுங்கள்  பார்ப்போம் ”  என்றால்
 ” இல்லையே ” என்று எனக்கு , முன்னால்  சொல்லிவிட்டு  முதுகுக்குப் பின்னால்  “  இவனுக்கு சட்டம் தெரியவில்லை  -  நான்  யாரையும்  கை  நீட்ட மாட்டேன் ” என்ற  -  அந்த ,  அப்படியான பதில்களுக்குள்   ஒளிந்து  கொள்ளும் பிரபல முற்போக்கு முகங்கள்.
“ இல்லை, தோழர்  நீங்கள் வரலாற்றை சிதைக்கின்றீர்கள் , இது  அறிவு நாணயமில்லை , இதுதான்  நீங்கள் பெரியாரிடம்  கற்றுக் கொண்டதா , ஏன் நீங்கள் வலிந்து புதிதாக  ஒன்றை  வரைகின்றீர்கள் ” என்று “ அவசரமான  ஆத்திரத்தை ” அள்ளித் தெளிப்பவர்கள் .
அதுமட்டுமல்ல ,  என் பக்கத்தில் இருந்த சிலரே , “ வேண்டாம் , ……….. விரும்பவில்லை ”  என்ற  ‘ வேண்டுகோள் ‘ போன்ற ‘ எச்சரிக்கைகள் ‘ ,
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் – டிசம்பரில் – பொதுவாக  பல  சிகப்புகளுக்கும் , கருப்புகளுக்கும்  ’ வெண்மணி ஜீரம் ‘ வந்துவிடும். அப்போது  யாரோ, எவரோ, எப்போதோ சொன்ன  சொல்லாடல்களையும்,  எழுதிய  எழுத்துக்களையும்   இப்போது  இவர்கள்  வாயால்
“ வாந்தி எடுக்கும் ஆரோக்கிய  “ சூழலில் ,    
 “ தொடரலாமா , விட்டுவிடுவோமே “ , என்ற  குழப்பங்கள்  எனக்குள்  வரும் .  அப்போதெல்லாம்
“ என்னங்க ஆச்சி, எந்த அளவில் இருக்கு , இன்றைக்கு இப்படி ஒரு பதிவு வந்திருக்கு பாத்திங்களா ? “  என்று  ஒரு குரல்  என்னை  ’ உசுப்பேத்திவிடும் ‘  ஆம் ,  அந்தக் குரலுக்குரியவர்  தோழமைக்குரிய  அண்ணன் , தலைவர் கொளத்தூர் மணி அவர்கள்.  மீண்டும் எனக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்  கம்ப்யூட்டரும் ,  கீ போர்டுமாக அய்க்கியமாகி விடுகிறபோது ,
 “ ஏங்க , திரும்பவும்  கண்ணுல  பிரச்சனை  வந்திடப்போவுது  நடுவுல கொஞ்சம் ரெஸ்ட் வுடுங்க “ அன்புத் துணைவியாரிடமிருந்து  கோரிக்கை  வரும். தொடர்ச்சியாக அது என்னால் மீறப்படும்போது  -  மகஜர்  வேளச்சேரிக்குப் போக , அங்கிருந்து என் செல்ல மகளிடமிருந்து அன்புக் கட்டளை , ‘ அதட்டலாய் ’ வெளிப்படும்.  இத்தனையும் கடந்து -   
நான்  வரலாற்றை மாற்றவில்லை . அல்லது சரித்திரத்தை என்  வசதிக்கு வளைக்கவில்லை . வரலாற்றின்  படிநிலையை  மாற்றியமைத்திட  நான் பரபரக்கவில்லை. யாருடைய உடமையையும்  எங்களுடையது   என்றோ  அல்லது எங்களுக்கும் உரிமை உண்டு என்றோ அதில் நாங்கள் யாரும் உரிமை கோரவில்லை , கேட்கவில்லை . முற்று முழுதாக  உங்களுக்கே  உரியதுதான் .  ஆனால் ,  உங்களுக்கே  உரித்தான  ஒன்றில்  எங்கள் தோழர்களின்  இரத்தம்  ஏன்  சிந்தப்பட்டது ?  உங்களுக்குத்  தெரியும் அது  எங்களின்  இரத்தம்  என்று  பின் ஏன்  மறைக்கின்றீர்கள் ,  அல்லது  மறுக்கின்றீர்கள் ?  
 ஆம் ,
“ பச்சைத் தீ ”  - இந்த  ஒற்றை  செய்தியைத்தான்  உங்கள் எல்லோர் முன்பும் கேள்வியாக  வைக்கிறது !  
இப்போது “ பச்சைத் தீ ” ஏறத்தாழ  இறுதிக் கட்டத்தில் ,   சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையை  எனக்குள்  சூடாய்  உணர்கிறேன் .

   

08 ஆகஸ்ட் 2015




குடிதாங்கிகள்....
-      பசு.கவுதமன்.


மிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்திகளுக்கு ‘ விஷயதானம் ’ செய்து கொண்டிருப் பவர்களில் முக்கியமானவர்கள், குறிப்பிடத்தக்கவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர், இராமதாஸ் அவர்களும், மற்றும் அவரது மகனும், 2016ஆம் ஆண்டின் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் வேட்பாளருமான மருத்துவர், அன்புமணி அவர்களும், ( இப்ப அந்த வடையும் போச்சு ) அவர்களைப் போன்ற அந்தக் கட்சியைச் சார்ந்த ‘ அறிவார்ந்த ’ பலரும், அவர்களோடு திராவிட ஒவ்வாமையால் கடுமையான பாதிப்புக்கு ஆளான தமிழ்தேசிய  ‘தம்ளர்களும்’ தான்! 
                                                
இவர்களுக்கு இருக்கின்ற பலமே - பொதுவாக அரசியல் ‘செய்பவர்களுக்கு’ - இருக்கின்ற பலமே, தமிழர்களின் இரண்டு தனிப்பட்ட குணங்கள்தான். அவையாதெனில், முதலாவது, எதையும் உடனடியாக, சுலபத்தில் மறந்துவிடுகின்ற பொதுப்புத்தி. அது நல்லதானாலும், கெட்டதானாலும் பொதுவான மறதி. ஆனால் தற்போது தமிழர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக அந்த ‘ அம்னீஷியா ’ விலிருந்து விடுபட்டு நடுவிலே கொஞ்சம் நினைக்கத் துவங்கி யுள்ளார்கள் என்பது ஆறுதல் தரக்கூடிய விசயம்.
இரண்டாவது, ‘பழக்கப்படுத்திக் கொள்வது’ என்பதைப் வழக்கமாக்கிக் கொண்டு பழகிக்கொள்வது. எந்த ஒன்றையும்"இல்லையா? சரிவிடு, பாத்துக்கலாம்"என்று பழகிக் கொள்கின்ற மனோபாவம். இந்த இரண்டு குணநலன்களுமேதான், தமிழ்ச் சமூகத்தின் சகலதளங்களிலும் அரசியல் ‘’ பன்னுகிறவர்களுக்கு ’’ பயன்படுகின்றது என்றால்  அது மிகையில்லை. இந்த பொதுபுத்திகளை மறக்காமல், அதன் அடிப்படையில் இதனை அசை போடவேண்டும்.






தோழர் திருமாவளவன் அவர்கள், தந்தி தொலைக்காட்சி செவ்வி ஒன்றில்  (30.12.2012) ஒரு செய்தியினை பதிவு செய்தார். மரு. இராமதாஸ் அவர்களுக்கு “ தமிழ் குடிதாங்கி ” என்ற பட்டத்தினை வழங்கியது தொடர்பாக, ஆனால் அதில் கூடுதலாக ஒரு செய்தியினை சொன்னார், “ வன்னிய பெண்கள் அவர் மீது மண்ணை வாறி இறைத்த பிறகும் எங்கள் தோழர்களுடன் நின்றார் ” என்பதாக! அந்த சம்பவம் உண்மைதான் ஆனால் அங்கே பெண்கள் கைகளில் இருந்தது மண்ணல்ல – தரையைக் கூட்டுகின்ற “ “விளக்கமாறு ” என்பதுதான் உண்மை! அதுமட்டுமல்ல, அவர்கள் மருத்துவரை நேருக்கு நேர் பேசியது எழுதமுடியாதது. ஆனாலும் அது பின்னால் வரும்.  அங்கே நடந்தது என்ன? குடிதாங்கிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் என்ன சம்பந்தம்? அதுமட்டுமல்ல, அவருடைய பாதுகாப்பு கருதி தோழர்கள் அவரை, அவர்களுடன் வைத்துக்கொண்டனர். சொந்த சாதி துரத்தி விட்டது என்பதும், காலனி மக்கள் அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என்றதும், காவல்துறை இவர் இருந்தால் சட்டம் ஒழுங்கு கெடும். அவரை வெளியேற்றுங்கள் என்று சொன்னதும் உண்மை, உண்மை. பட்டம் வழங்கிய தோழர் திருமாவுக்கும், குடிதாங்கிக்கும் என்ன தொடர்பு? எப்போது தொடர்பு? தோழர் திருமா எப்போது குடிதாங்கிக்கு வந்தார்? அவர் ஏன் அந்தத் தமிழ் குடிதாங்கி பட்டத்தை மருத்துவர் ராமதாசுக்கு வழங்கினார்?  உண்மையில் யார் “ தமிழ் குடிதாங்கி ” ? என்பதை “ நோண்டி நொங்கெடுத்து ” சற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னால்  இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏன்? குடிதாங்கி நிகழ்வில்,
குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
நீலப்புலிகளின் நிறுவனர் உமர்பாரூக் என்ற டி.எம்.மணி
என்ற ஆளுமைகளின் செயல்பாடுகளும், களப்பணியும், பங்களிப்பும்
இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் நமக்குத் தெரியாத, வெளிவராத செய்திகள், மறைக்கப்பட்ட உண்மைகளை பதிவு செய்ய வேண்டிய வரலாற்று அவசியம் ஏற்பட்டது.
இது என்னுடைய முன்னுரையின் துவக்கம் மட்டுமே!
விரைவில் நூலாக…,
கீழைத்தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளின் வீரெழுச்சியில் பெரியாரியக்கப் பங்களிப்பு என்ன என்பதை பதிவு செய்த ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் போல…,
குடிதாங்கியில் பெரியாரிக்கப் போராளிகளின் பங்களிப்பு என்ன?
விரைவில் தரவுகளாக…,
அதிலிருந்து சில…,
தோழர் செல்வராஜ் (குடிதாங்கி வழக்கின் இரண்டாவது குற்றவாளி – A2 )
சொல்கின்றார், 


" நேரடியா ராமதாஸ் வீட்லே போய் பேசியவன் நான். புதுசா காலனிக்காரங்க பிரச்ச னைய கிளப்புறாங்க. FMD ஊர் மேப் எடுத்துக்கிட்டுப் போனேன். விரங்களைச் சொல்லி இது அவுங்க இடம், நம்ம இடம் எங்க இருக்குன்னு விபரமா பேசினேன். அவர் எதுவும் சரியா பேசல,
எங்க தோட்டத்துக்குப் போனிங்களா?
தோட்டம் ஏது – அப்பஏது தோட்டம்!
அப்ப தைலாபுரம் தோட்டமில்லையா?
அப்ப ஏது தோட்டம். திண்டிவனம் வீட்ல உட்கார்ந்து வராண்டாவில் -  இதுபோல ஒரு பெஞ்சிலதான் உட்கார்ந்து பேசினேன். இதேபோல ஒரு வீடு. அதிலே ஒரு பக்கம் ஆஸ்பத்திரி. வீட்டுக்கு வந்திடுங்கன்னாரு பக்கத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனோம்.
பண்ருட்டியார் சென்னையிலிருந்து வந்துகிட்டு இருக்கார். வந்துடுவாருன்னு காலை 10 ½ வரைக்கும் காக்க வச்சிட்டாரு. அவரு வரல, நாங்க விடிகாலை 5 ½ க்கு அவரு ஆஸ்பத் திரிக்குப் போயிட்டோம். ராமச்சந்திரன் வரல நாங்க திரும்பிட்டோம்.
ஒருவாரம் கழிச்சி சோழபுரம் மீட்டிங்கு இவர் – ராமதாஸ் – வந்துருக்காரு. வந்தவரு நேரா அவங்கத் தெருவுல ( காலனி தெரு ) நைட் 11 மணி வாக்கில போய் அவுங்ககிட்ட, எந்தப் பிரச்சனையும் இருக்கப்படாது. எதுவானாலும் எனக்கு போன் பண்ணுங்க நா வந்து தூக்கிட்டு வற்றேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு…. "
இன்னும் அவர் தொடர்ந்து பேசுவார்.


இப்போது தோழர், அண்ணன் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
" 120 வன்னியர் வீடுகள், 200 காலனி வீடுகள். முதலில் 120 வீடுகளிலும் பேசுகிறேன். ஆண்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். பெண்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எடுத்த உடன் முரண்படாமல் அடிக்கடி பேசத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பெண்களுக்கும் நம்பிக்கை வந்தது. அண்ணன் சொல்றாருன்னு சிலபேரும், தம்பி சொல்லுதுன்னு சிலபேரும் ஏத்துகிற கருத்து உடன்பாடு வந்துடிச்சி. நான் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கிற நெருக்கடியை பயன்படுத்திக் கொள்கிறேன்.
என்ன நெருக்கடி?
அவங்க கொடுத்த வழக்கிலே இவங்க ( வன்னியர்கள் ) 80 பேர் மேல வழக்கு,  அவங்க
(சேரித் தோழர்கள்) 30 பேர் மேல வழக்கு. ஆறு மாசம் இவங்ககிட்டேயும், அவங்க கிட்டேயும் தொடர்ந்து பேசுகிறேன். பி.சி.ஆர் கேஸ். கேஸ் நெருக்கடி முக்கிய காரணம். 15 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்ல போய் கையெழுத்துப் போடனும். ஒரு வருசமா இப்படி கையெழுத்துப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நெருக்கடியை நான் பயன்படுத்தினேன். தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்லே போய் அவங்க கூட நின்னு கிட்டு நீ 80 பேரு 15 நாளைக்கு ஒருதடவ வற்றதுக்கு என்னாச்சி, நீ 30 பேரு உனக்கு என்னாச்சி? என்னாய்யா இது, உங்களுக்கு இது அசிங்கமாப்படலயா? இப்படிப் பேசிப் பேசியே இரண்டுபேரையும் ஒன்னா வச்சி காபி, டீ குடிக்க வச்சி , இப்படியான நடவடிக்கை ஆரம்பிச்ச பிறகுதான் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர்களை நம்முடைய இடத்திற்கு வரச்சொல்லி பேச ஆரம்பிச்சேன். அப்பறம் நாம மட்டும் இதிலே நின்னு பேசிடக்கூடாது என்று, டி.எம். மணியை உள்ளே கொண்டாந்து – அவர்கிட்டே நானே நேர்ல போய் சொன்னேன். அவர் உடனே, அண்ணே நான் வந்துடு றேன்னு சொல்ல அவரைக் கூட்டிக்கொண்டு முதல்ல வன்னியத் தெருவுக்குப் போய்ட்டு, இவங்கதெருவுக்கு வந்து ஒரு தேதிய FIX பன்னினோம்….."
அண்ணனும் தொடர்ந்து பேசுவார்.
இனி, அண்மையில் மறைந்த தோழர் டி.எம்.மணி…,


" 80 வன்னியர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு குடிதாங்கி சுடுகாட்டுச் சாலைப் பிரச்சனைக்கு முடிவு கண்ட பிறகு, சட்ட மன்ற உறுப்பினர்கள் குடந்தை ராமநாதன், போளூர் வரதன் போன்றவர்கள் சட்டமன்றத் தில் பா.ம.கவின் முகத்திரையை கிழித்தபிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுச்சாலை வழியே பிணத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிறகு, அரசியல் லாபம் கருதி பிரச்சனையை தான் முடித்ததாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடுதான் குடிதாங்கி வருகிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சமூகப் பெண்கள் ராமதாசிடம் உங்கள் கட்சிக்காரர்கள்தானே மறித்தார்கள். இப்போது நீங்களே காட்டிக் கொடுப்பது போல சேரி மக்கள் பக்கம் சேருகிறீர்களே என்று கடுமையாக திட்டி, சேரிமக்களோடு அவர் வந்தால் மீண்டும் சாலையை மறிப்போம் என்றார்கள். நான்காண்டு காலம் போராடி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகண்ட எங்கள் மக்களும் ராமதாஸ் வருகையை விரும்ப வில்லை. DSP கந்தசாமியும், RTO பழனிவேலுவும் நீங்க இங்க இருக்காதீங்க, கலவரம் வரும்  போயிடுங்க என்று கட்டாயப்படுத்துகிறார்கள். நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கும்பகோணத்திற்கு அண்ணன் ஆர்.பி.எஸ். ஸ்டாலினோடு போனில் தொடர்பு கொள்கிறேன்…… "

  
நூலில் இன்னும் பேசுவார் மறைந்தத் தோழர் டி.எம்.மணி என்ற உமர்பாரூக்,
விரைவில் தமிழ் குடிதாங்கிகள்….!
                                                    அண்மையில் இந்த நூல் குறித்த செய்திகளை  பகிர்ந்து கொண்டபோது,                               



26 மார்ச் 2015

திராவிடர் - பெரியார் ஒவ்வாமை


 திராவிடர் - பெரியார் ஒவ்வாமை - இது ஒரு தொடர் கட்டுரை.

ண்மைக் காலமாகவே, கடுமையான “ திராவிட ஒவ்வாமை ” க்கு ஆட்பட்டவர்களால்,
“ தமிழ் தேசிய  ரசிகர்களால் ”, “அவர்கள் மட்டுமே தமிழர்கள் ஆன, புதிய பச்சைத்துண்டு நம் ஆழ்வார்களால் ” அதிலும் குறிப்பாக , திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களின் “ ம ” போன “சங்கம்”. அதில் தோழர்கள் பேரா. சுபவீ – VS – பெமவும் “திராவிடமா- தமிழ்தேசியமா ” என்று பேசிய அல்லது விவாதம் என்று சொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னால் வலைப்பூக்களிலும், முகநூல்களிலும் மயிர்க்கூச்செரியும் விவாதங்கள், வியாக்கியானங்கள், படிக்கும்போதே கண்கள் கூசிய தமிழின் உச்சபட்ச நாகரீகமான கெட்ட வார்த்தைகளை உள்ளடக்கி - ஒருவேளை அவர்கள் பெருமாள் முருகனின்,
“ கெட்டவார்த்தை பேசுங்கள் ” நூலின் அட்டையை மட்டும் படித்தவர்கள் போல – எல்லோரும் எழுதி, அது இப்போது துணுக்கு அளவுக்கு சுருங்கி, ஆனாலும் அந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை ! அது போகட்டும்,
 நான் என் செய்திக்கு வருகின்றேன். 
 சில தினங்களுக்கு முன் என்  செல்லப் பேத்தி மகிழின் இரண்டு படங்களைப் பகிர்ந் திருந்தேன். பல தோழமை உள்ளங்கள் வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தனர். பலர்  தொடர்ச்சியாக அது தொடர்பான சில செய்திகளை என்னோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எல்லோருக்கும் என் இனிய நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இது தொடர்பாக எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கே பதிவிடு கின்றேன்.
காரணம், ‘பலருக்கு’ அதுவே பதிலாக அமையக் கூடும் என்பதால் !


இந்தப் புகைப்படங்களில் ஒன்று எங்கள் மருமகன் அன்பிற்குரிய ஜே. கிறிஸ்டோபர் டொமினிக். மற்றொன்று எங்கள் மகள் அன்பிற்குரிய அ.க. தென்றல். 08.05.2011 அன்று இவர்களது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு, சாதி மறுத்து , மதம் மறுத்து  நடைபெற்றது. ( இது தென்றலின் தந்தை வழியே மூன்றாவது – தாய் வழியே நான்காவது சாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு. )  இவர்களது மகள், எங்கள் செல்லப் பேத்தி தெ.கி.மகிழ் – 14.06.2014 அன்று பிறந்தாள்.


அன்பான தோழர்களே,  மகிழ் என்ன சாதி ?
கொஞ்சம் சில, பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்,
இங்கே தேவை கருதி சாதி அல்லது வகுப்புப் பெயர்களை பதிவிட வேண்டியுள்ளது, மன்னிக்கவும்.
என்னுடைய தந்தையார், தஞ்சை ந. பசுபதி அவர்கள், த/பெ.நடேச ஆச்சாரியார், விஸ்வ கர்மாக்கள் என்று சொல்லப்படும் கம்மாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். எனது தாயார் ப. பத்மா அவர்கள், த/பெ.பக்கிரிசாமிப் பத்தர் அதே சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்தவர். என்றாலும் அவர்கள் தூரத்து உறவினர்கள் கூட கிடையாது. எனது தந்தையார் குடும்பத்தில் அவர் மட்டுமே சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர். ஆனால், என் தாயார் குடும்பத்தினர் பெரும்பாலும் சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர்கள். வாழ்க்கை இணையர்கள் ஆயினர். 11.02.1950 இல் நடைபெற்ற அந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வில் தாலிகட்டும் சம்பிரதாயம் கிடையாது. இதன் காரணமாகவே தந்தையார் வழி உறவினர்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டனராம். இந்த செய்திகள் அவரது பேட்டி யாக 15.10.2000 தேதியிட்ட விடுதலை நாளிதழில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதே, 50களிலேயே ‘ நோ ’ தாலி – தாலி காப்பாளர்களே ! 
அப்படியே என்னுடைய துணைவியார் அ.அறிவுச்செல்வி பக்கம் வருவோம்.

   எனது தந்தையார் தஞ்சை ந.பசுபதி மற்றும் எனது மாமனார் மண்ணச்சநல்லூர்                                                                                                                                            ச.க.அரங்கராசன்
அவருடைய தந்தையார், மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன், த/பெ. கருப்பண்ணப் பிள்ளை. சோழிய வெள்ளாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவரது தாயார், அ.அனந்தம்மாள், த/பெ.அய்யம்பெருமாள். (பேட்டவாய்த்தலை) நாடார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். இவர்கள் இருவரும் வாழ்க்கை இணையராகினர், எப்படி?
தந்தை பெரியாரவர்களின் அறைகூவலை ஏற்று, 1957களில் இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு, சாதியை – வகுப்பைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டத்தினைக் கொளுத்தி, இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு வருகின்றார் மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன். அவரைப் போலவே பேட்டவாய்த்தலையிலிருந்து, அ.கணபதி அவர்களும், இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திவிட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்தியசிறைக்கு வருகின்றார். (தோழர் அ.கணபதி, பின்னாளில் பேட்ட வாய்த்தலை ஊராட்சி மன்ற பெருந்தலைவராக இருந்தவர்.) சிறையில் தோழர்கள் ச.க.அரங்கராசனும், அ.கணபதியும் நண்பர்களாகி, சாதி ஒழிப்பை பேச்சோடு நிறுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விவாதம் வந்தபோது, தோழர் கணபதி, என் தங்கையை மணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்க, சம்மதித்தத் தோழர் அரங்கராசன் சிறையிலிருந்து வெளிவந்த பின் 08.10.1961 இல் அ.அனந்தம்மாளை வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொள்கின்றார். அவர்களது மூத்த மகள்தான் – எனது துணைவியார் அன்பிற்குரிய அ. அறிவுச் செல்வி அவர்கள்.
அன்பான தோழர்களே, அ. அறிவுச்செல்வி என்ன சாதி?
சரி, எங்களுடைய மகள் அ.க.தென்றல் என்ன சாதி?
அதுமட்டுமல்ல,
என்னுடைய சகோதரியின் வாழ்க்கை இணையர் வன்னியர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு.
தோழர்களே, அவர்கள் இருவரும் என்ன சாதி?
என் சகோதரி மகளின் வாழ்க்கை இணையர், கள்ளர் சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்த வர். அவர்களது மகள் யாழினி.
அன்பார்ந்த தோழர்களே, யாழினி என்ன சாதி?
என் துணைவியாரின் சகோதரியின் துணைவர்  உடையார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களது மகன் அ.இர. சூரியஒளி.
அன்பார்ந்த தோழர்களே, அ.இர. சூரியஒளி என்ன சாதி?
எங்களுடைய இரண்டு குடும்பங்களிலும் ஒரே சாதிக்குள் யாருக்கும் “ திருமணம் ” நடைபெறவில்லை. “இப்படித்தான் என்று”  நாங்கள் யாரும் திட்டமிட்டுக் கொள்ள வில்லை. அதற்கான மனோபாவமும், கருத்தாக்கமும் எங்களுக்குள் இயல்பாகவே இருந்தது. நாங்கள் மட்டுமல்ல. அண்மையில் நடைபெற்ற தோழர் அரசெழிலன் மகன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வுக்குப் பின்னும், இது தொடரும்தான். இப்படியாக எண்ணற்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் – தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. இது எப்படி? எதனால் சாத்தியப்பட்டது?
ஆம், தோழர்களே,
இதை சாதித்தது  திராவிடர் இயக்கம் !
இதைத்தான் தந்தை பெரியார் சாதித்தார் !
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தி சொன்ன புத்தனது இயக்கம் பார்ப்பனர்களால் ஒழிக்கப் பட்டதே, ஏன்? பார்ப்பனர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஆளுமையான சாதிப் படிநிலையைக் காப்பாற்றிக் கொண்டால்தான் அவர்களால் மனுதர்மப்படிக்  கோலோச்ச முடியும் என்பதால் புத்தன் ‘ இந்தியாவுக்கு வெளியே ’ அனுப்பப்பட்டான்.
சித்தர்களால் அவர்களது பாடல்களைத் தாண்டி வேறு என்ன சாதிக்க முடிந்தது?
திருவள்ளுவரால், வள்ளுவத்தை வாழ்வியல் நெறியாக, இயக்கமாகக் கட்டமைக்க முடிந் ததா? இந்தத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் திருக்குறளை  “ திருக்குறளாக ” அறிமுகப் படுத்தவே ஒரு பெரியார்தான் தேவைப்பட்டார்.
உங்கள் இலக்கியக் கர்த்தாக்களால் எதை இயக்கமாக்க முடிந்தது, பக்தியைத் தவிர ?
முக்திநிலையில் பெரும் பேறு பெற பக்தியை இயக்கமாக்கி, எங்கள் தாயை, சசோதரியை, மகளை  பார்ப்பனர்களுக்கு  “ தேவடியாள் ” என்பதை உறுதி செய்ததைத் தவிர வேறு என்ன செய்து சாதித்தார்கள் புலவர்களும், பண்டிதர்களும், வித்துவான்களும் ?
பெரியாருக்கு முன்னே யாருமே இல்லையா ? திராவிடர் இயக்கம்தான் சாதித்ததா ?
‘ தமிழ் தேசியம் ’ பேரிரைச்சலாய்க் கேட்கிறது.
முன்னே பலர் விதைத்தார்கள்; பெரியாரும், திராவிடர் இயக்கமும் அறுத்துக்கொண்டது என்று ‘தமிழ் தேசியம் ’ ரொம்பவும் கோபமாகச் சொல்கிறது.
பெரியாருக்கு முன்னே பலர் இருந்தார்கள்தான், விதைத்தார்கள்தான்.
இல்லை என்று பெரியாரும் சொல்லவில்லை,
திராவிடர் இயக்கம் மட்டுமே என்று உரிமையும் கோரவில்லை !
அவர்கள் மண்ணில் விதைத்தார்கள். ஆனால், 
தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க முடியவில்லை  !
காரணம் அவர்கள் யாரும் இயக்கமாக இல்லை. எனவே அவர்களால் இயங்க முடிய வில்லை. அவர்கள் விதைத்துவிட்டு
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை ’ என்று முடித்துக் கொண்டவர்கள் !
பெரியார் விதைத்தார்.  அவர் மண்ணில் விதைக்கவில்லை.
பெரியார் விதைத்தார், அவர் மக்களுக்குள் விதைத்தார்.
அதனால்தான் அவரால் இயக்கமாகக் கட்டமைக்க முடிந்தது.
எது, எதுவெல்லாம் நேர் என்று சொல்லப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு பொதுபுத்தி யில் ஏற்றப்பட்டதோ – அவற்றிற்கு எதிராகக் கலக்குரல் எழுப்பி அவற்றைக் கட்டுடைத் தார். எனவேதான் அவரால் புதிதாக இயக்கம் கட்டமைக்க முடிந்தது. மனிதர்களுக்கா வென்றே பெரியாரால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.
அதனுடைய நீட்சிதான் தற்போது  ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற திராவிடர் இயக்கம் என்று வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள்.
இவர்கள் சொல்கின்றார்கள், “ பெரியார் பேசியது எதிர்வினைக் கருத்துகள். எதிராகப் பேசினார், எதிராக செயல்பட்டார். அவருக்கான நேர்வகைக் கருத்தியலை அவர் உருவாக்கவில்லை “ என்று.  இந்தத் தமிழ்தேசியர்கள் எதையெல்லாம் எதிர்வினைக் கருத்துகள் என்கின்றார்களோ அதுவெல்லாம்தான் தமிழ்ச் சமூகத்திற்கான நேரான கருத்தாக்கங்கள். அதைத்தான் சென்ற பத்தியில் சொன்னேன், எதுவெல்லாம் இந்த சமூகத்திற்கு எதிரானதோ அவற்றையெல்லாம் நேர் என்று சொல்லி பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டது. அதைத்தான் பெரியார் கட்டுடைத்தார்.
பெரியார் குறித்த இந்த ஒவ்வாமை ஒன்றும் இன்றைக்குப் புதிதாய் ஏற்பட்டதல்ல. தலைவர் தந்தை பெரியார் வாழ்ந்த – அவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவரும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல பல சந்தர்ப்பங்களில் நிறைய பதில் சொல்லியுள்ளார். அவற்றையெல்லாம் தொடர்ந்து இந்த கட்டுரையிலே மீள்பதிவு செய்கின்றேன்.
ஆம் , இது ஒரு தொடர் கட்டுரை.
இப்போதைக்கு இதனை தொடரும் என்று முடிக்கின்றேன். முடிக்கும் முன்பாக இதனைப் படிக்கும் தோழர்களுக்கு ,
இந்தக் கட்டுரையினை படித்ததன் அடிப்படையில் - நியாயமான மூன்று கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்க வாய்ப்புள்ளது.
தமிழ்தேசிய ‘ தம்ளர்கள் ’ வரிக்குவரிகூட கேள்விகள் கேட்கலாம். அந்த புத்திசாலி களுக்குப் பதில் சொல்லும் சிற்றறிவும், பேரறிவும் என்னிடம் இல்லை.
அந்த மூன்று கேள்விகளை பதிவு செய்யுங்கள். பதில்களோடு கட்டுரையினை அடுத்து தொடர்கிறேன்.
தோழமையுடன்,
பசு.கவுதமன்.
                                 அய்யாவுடன் நானும் என் இளைய சகோதரி மாதரியும்.


16 மார்ச் 2015




அரசவைக் கவிஞனே.!


அரசியல் விபச்சாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட
பலதாரப் பாஞ்சாலியே!
பதவிப்பிச்சைக்குப்
பத்திரிக்கைத் தெருக்களில்
எழுத்துப் பாத்திரமேந்தியப் பாடகனே!

தனிப்பாடல் தொகுதிகளின் பக்கங்களைப்
பக்குவமாய்த் திருடி
சினிமா வீதிகளில் சில்லறையாக்குபவனே!
உன்,
“தேசப்பிதாக்களையே திகைக்க வைத்த
ஈரோட்டு வியப்புகள்!
எழுச்சியின் வெளிச்சங்கள்!
எங்கள் அம்மாவையா......?

விலாசம் தெரியாமல் விளையாடுபவனே,
போய் உன் “பாரதமாதாவையும்
அவள் தாத்தாவையும் கேள் ?
ஒரு காலப்பெட்டகத்தில்
இருட்டடிக்கப்பட்ட
இந்திய சரித்திரமே
ஈரோட்டில் சோறுட்டப்பட்டவை!

சுண்டைக்காய் நீ,
யாரோ சில தலைவெட்டிகளுக்கு
தாலாட்டுப் பாட
ஈரோட்டுச் சுடரொளியை
எழுத்துவிரல் கொண்டு மறைக்கப் பார்க்கிறாய்!
உன்னை அலட்சியப்படுத்துகிறோம்,
ஆனால் எச்சரிக்கின்றோம்!

எங்கள்,
வார்த்தைகள் கூட உன்
காவிய வாக்கியங்களை காயடித்துவிடும்!
உன்,
கற்பனைத் துணிக்கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுவிடும்!

மரியாதக்குரிய மாநில அரசே!
மதுவை ஒழிப்போமென்று
மார் தட்டிக்கொண்டே
ஒரு பீப்பாயைக்
கொலுவேற்றிய கொள்கை என்ன?
“பெரியார் விழாவெளிச்சத்தில் -
முன்பு
“காணிக்கையாக்கியதைக்
கேளிக்கையாக்கிடாதீர்கள்!
                               -: விடுதலை-13.03.1979
ஆஸ்தானக் கவிஞராய் வீற்றிருந்த கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் குடும்பத்தப் பற்றி அவதூறாக எழுதியபோது, அதன் எதிர்வினையாக எழுதியது. 
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் இதனை மீண்டும் பதிவு செய்கின்றேன். நன்றி - விடுதலை
.................................................................................................